Monday, March 23, 2020

காலம் தந்த பாடம்

 கொரோனா கற்றுத்தந்த பாடம்

  கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது.
ஆம் இது  பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது.

1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990க்கு பின்
 பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலைமை மாறியது. 

 

உலகில் உள்ள  உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது, அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது.

 

குறிப்பாக இந்தத் தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை என்று நினைக்கும் அளவிற்கு வேகம். அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது.

 

மனிதனின் இந்த வேகத்திற்கு இயற்கை போட்ட கடிவாளம் தான் இந்த கோவிட்-19,

 

கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான்  உலகமே இதைக்கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறது. இது மனிதனுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை விட மனதிற்கு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பாடமாக ஆகிவிட்டது. உலகமே வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கிறது என்பதைவிட ஒடுங்கிக்கிடக்கிறது என்றால் மிகையாகாது.

 

ஆனால் இயற்கை.....

 

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,  

  • மழை அதன் போக்கில் பெய்கின்றது

  • வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.

  • மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன.

  • யானைகள் உலாவுகின்றன,

  • முயல்கள் விளையாடுகின்றது,

  • மீன்கள் வழக்கம்போல் நீந்துகின்றன‌.

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.

 

ஆனால், 

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது.

 

முடங்கியது உலகமல்ல

மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்.

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,  

உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான். உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக, நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான் ஓடினான், பறந்தான். உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், 

 

கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்.


ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்.

முடங்கி கிடக்கின்றான் மனிதன்,கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்.

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும்  உள்ள  பாதுகாப்பு கூட தனக்கில்லை,

இவ்வளவுதானா நான் என விம்முகின்றான்

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்,

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தைவிட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது.

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் ஏன் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் மொழியில்  பேசுகின்றன‌. 

 மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

வானில் உயரப்பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கு பயமில்லை என்கின்றது கழுகு.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.

 

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளித்தள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு.

 

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடற்கரை வந்து சிரிக்கின்றது மீன். 

 

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,.

 

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல.....

 

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம.. 

 

  • பணம்,பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு
    மகிழ்கின்றது மழலை கூட்டம்,  

  • நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்.

  • பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடபடுகின்றன‌

  • தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று
  • அண்டார்டிக்கா பனிபாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று


ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி  துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்.

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது,

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

மனிதன் தன் திட்டம்,கனவு, வேகம்,ஆசை,எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை 

என உணர்ந்து அடங்கி இருக்கின்றான்.

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி மரத்தில் கட்டி, பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனை போல மனிதனை கட்டிவைத்து பாடம் சொல்லிக்கொடுக்கின்றது காலம்.

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்.

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும்  பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறி கூட்டம்.

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு  ஞானத்தின் எச்சரிக்கை. 

காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தை சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல  எச்சரிக்கின்றது காலம்
அதில் மெல்ல ஞானம் பெற்றுகொண்டிருகின்றான் மனிதன்,
அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக
அடிக்க காலத்துக்கு தெரியாதா என்ன?
மனிதா!..... உலகம்  உனக்கு மட்டுமே சொந்தமில்லை.


Sunday, February 23, 2020

இலைகளின் மூலம் மரங்கள்


  இலைகளின் மூலம் மரங்களை உருவாக்க முடியுமா?

உலகையே திரும்பி பார்க்கவைக்கும், பசுமைப் புரட்சி

     மரம் என்பது அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் ஆகும்.ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை. மரங்கள் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
      நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி  இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன.
        தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல்காற்று மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை மனிதர்களிடையே உணர்த்தியுள்ளது. ஆனால் முக்கியத்துவத்தை  உணர்ந்த அளவுக்கு மரக்கன்று நட வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர்களிடம் இல்லை.
     இயற்கை நமக்கு அளித்த எண்ணற்ற கொடையை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் அழியும் தருவாயில் பத்து லட்சம் உயிரினங்கள் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் கொடுத்திருந்தது இதில்  பல்லாயிரக்கணக்கான செடிகள், மரங்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பறவையினங்கள், பூச்சி இனங்கள் என எண்ணற்ற உயிரினங்கள் அடங்கும்.
       இவ்வுலகையும் உலகில் வாழும் உயிர்களையும் உயிர்வித்துக் கொண்டிருக்கும் ஒரே இனம் "மரங்களே" சமீபகால மாற்றங்களாலும் நகரமயமாதல்  மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மரங்கள் அழிக்கப்பட்டு பூமியே பாலைவனமாக மாறிவருவதை எவரும் மறுத்திட முடியாது. இதன் காரணமாக  ‘’சூழ்நிலை சமநிலைக்கு’’ பங்கம்  ஏற்பட்டுள்ளது.

 இதற்கு ஒரே தீர்வு மரம்!... மரம்!...மரம் மட்டுமே


          ஆகையால் இழந்த மரங்களை மீண்டும் உருவக்குவதும் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மரங்கள் அடர்ந்த வனங்களை பெருக்குவதற்குண்டான ஒரு எளியமுறை பற்றியதே இந்த பதிவு.
       இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஒழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி இருந்தால் செடி தானாகவே செழித்து வளரும் என்பதே இதுவரை நாம் அறிந்தது. அதிலும் மண் பதியம், விண் பதியம், ஓட்டு கட்டுதல் மற்றும் திசு வளர்ப்பு என பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன.
      ஆனால்... ஓர் இலையை பிடிங்கி நட்டால் அது செடியாகுமா? விதையில்லாமல் செடியை உருவாக்க முடியுமா? எனக் கேட்டால் நம்மை அனைவரும் மேலிருந்து கீழாக பார்ப்பார்கள்.
       மேற்கூறிய தொழில்நுட்பங்கள் எதிலும் சேராமல் புதிதாக “இலை பரப்புதல்” மூலம் அதிக மகசூல் தரக் கூடிய தாவர, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தாவரவியல் துறையில் புதிய சாதனை கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் ஒருவர். அவர் தான்  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளரான எஸ்.இராஜரத்தினம்.
 
மரமாகும் இலைகள்:
      ஆம்.ஓர் விதையில் இருந்து ஓர் மரம் .அதில்  உள்ள லட்சக்கணக்கான இலைகள் மூலம் லட்சக்கணக்கான மரங்களை உருவாக்க முடியும் என்ற இந்த கண்டுபிடிப்பு உலகத்தின் காடு வளர்ப்பு முயற்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உலகத்தையே  பசுமையின் பாதைக்கு எளிதில் கொண்டு செல்லும் என்பதில் சிரிதும் ஐயமில்லை.
இது எவ்வாறு சாத்தியமாயிற்று,
    இலைவழி நாற்று உருவாக்கம் குறித்து அவரே விளக்குகிறார்.  நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு,  முதுகலை பயின்று கொண்டிருந்த போது முற்றிலும் புதிதாக குறைந்த செலவில் ஓர் முறையில் தாவரங்களை உருவாக்கவேண்டும் என முயற்சி மேற்கொண்டு வந்தேன். 
வேர்விடும் இலைகள்
   அப்போதுதான், ஓர் தாவரத்தில் உள்ள இலைகளைப் பறித்து, விதைகளுக்குப் பதிலாக அவற்றை நட்டு செடிகளாக உருவாக்க முடியுமா என முயற்சித்தேன். முற்றிலும் இயற்கையான முறையில் இலைகளைப் பறித்து அவற்றை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடுகிறது. இதுவே  எனது புதிய கண்டுபிடிப்பாகும் என்றார்.
    பொதுவாக வேர்த்தூண்டலுக்காக சில ஹார்மோன்களைப் பயன்படுத்துவார்கள் ஆனால் நாங்கள் அவ்வாறு எதையும்  பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில்  இளநீரை மட்டுமே பயன்படுத்தினோம் என்கிறார் இவர்.

இலை வழி நாற்று உற்பத்தி:
    பொதுவாக நர்சரி கார்டனில் ஆண்டுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்குவதை லட்சியம் எனக் கொண்டால், 10 லட்சம் விதைகள் தேவைப்படும். இதைத் தவிர்க்க ஓர் மரத்தில் அல்லது செடியில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையைப் போல பயன்படுத்தலாமே என்ற யுக்தியின் அடிப்படையில்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறது. அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கிறதாம்.
     தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் உள்ள டைரக்ரேட் ஆப் அக்ரி பிசினஸ் டெவலப்மெண்ட் இயக்ககம்,இந்திய அரசின் சிறு, குறு, மத்திய  தொழில்களுக்கான அமைச்சகம்  இவரை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து அவர் கூறும்போது,
         இவ்வாறு  இலை வழி நாற்று உற்பத்தியின் மூலம் கலப்படம் இல்லாத மரபணு தூய்மையான நாற்றுகள் கிடைக்கின்றன. எனவே இவற்றின் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே   இத்தகைய செடிகளையே விவசாயிகள் அதிகளவில் விரும்புகின்றனர் என்கிறார்.
      இவர் இதுவரை இவ்வாறு இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளார். தற்போது இவ்வாறு வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டுருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


பயிற்சி:
      ஈடன் நர்சரி கார்டனில் வேளாண் கல்லாரி மாணவ, மாணவியருக்கு புதுமையான நாற்று உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி பட்டறை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமான வேளாண் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
     இந்த குளோனிங் முறையில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான  Organic Compounds அதிகம் உள்ள தாவரங்களை உருவாக்கித் தருவதால் தொழிற்சாலைகளின் லாபம் அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவரால் பயனடைந்துள்ளனர். 
        மரக்கன்று வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் ராஜரத்தினத்துக்கு, அவரது கண்டுபிடிப்பு மற்றும் சமூக பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள், பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு  அதிகளவில் மரக்கன்றுகளை உருவாக்கி நடவும், அரிய வகை மூலிகைத் தாவரங்களை மீட்டு எடுக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளது.
       மேலும், இந்தியாவிலேயே முதல் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் நர்சரியாக ஈடன் நர்சரி கார்டன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    இவரது இலை வழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும்,அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து விட்டால், இயற்கையை அழிவிலிருந்து காக்க முடியும். இம்முறையின் மூலம்   
    இவரது பண்ணையில் நாற்றுகளை பெற விரும்புவோர் அல்லது பயிற்சிபெற விரும்புவோர் www.edunnurserygardens.com  என்ற இணையதள முகவரியில் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


Monday, December 17, 2018

தேனீ-அற்புதமான உயிரினம்



தேனீ...
 ........உலகின் மிக சுவாரஸ்யமான மற்றும்
நுணுக்கமான ஒரு உயிரினம்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! ’ என்று
சொல்லியிருக்கிறார்
  -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 
இது இனிக்கும் செய்தியல்ல....!
அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்  தெரிந்துகொள்ளலாமா.............? 
முதலில்... ஆச்சரியம்.
மிகச்சிறிய அளவில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்சிறந்த 
மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்  தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகிதஉணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால்,அவற்றைவிடவும் கூர்மையான  ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.
ஆனால், அதிர்ச்சி   தரும் விஷயம்..
 அந்தத் தேனீக்கள் இப்போது"அழிந்துவரும் உயிரினங்கள்’' பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.
ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, 
ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போர்த்துகிறது. தேனீக்களின் 'வாழ்க்கைமுறை’ பற்றி தெரிந்து கொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்படிப்பட்ட  நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.


தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்பற்றி சுவாரஸ்யமான  பட்டியலை பார்ப்போம்
 உலகத்தில் ஐந்து வகை தேனீக்கள் இருக்கின்றன.
  • மலைத் தேனீ
  • இந்தியத் தேனீ
  •  கொம்புத்தேனீ
  • இத்தாலியன் தேனீ
  • கொடுக்கில்லாத தேனீ
இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்க்கிறார்கள் மற்ற தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.
ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். 
இதில்
  • ஆண் தேனீக்களுக்கு 90 நாட்களும்,
  • பணித் தேனீக்களுக்கு 70 நாட்களும்,
  • ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுட்காலம்.

                               
ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது   மட்டும்தான் வேலைஆண் தேனீக்கு ராணிக்கு பாதுகாப்பாக இருப்பதும், தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித்தேனீக்களின்  பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது என எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. .
HONEY HIVE-தேன்கூடு
தேனீக்கள் தேன் கூட்டை அறுங்கோண   வடிவத்தில் தான் கட்டும். ஏனென்றால்,அப்போதுதான் ஒரு சென்ட்டிமீட்டர்  இடத்தைக்கூட வீணாக்காமல் முழுவதுமாகப் பயன்படுத்த முடியும். 
  • ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண அறை,
  • பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண அறை,
  • ராணித் தேனீக்கு உருளைவடிவில் அறை
என தனித்தனியான வடிவத்தில் கூடுகட்டும். கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம் மற்றும் மதுரம்...இவை இரண்டும் தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டு விடும்.
அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? 
குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான்
உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
HONEY-தேன்

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை 
ஒப்படைக்கும்.அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி ஐம்பது முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்  ஓரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டேஸ் INVERTASE எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீஅதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும். அதை எந்த ஆண்  தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும்.அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

 தேனீயின் தகவல் பரிமாற்ற முறை:
   தேன் சேகரிப்பதற்கான தகவல்களை  தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது.இது இணையத்தள வேக முறைகளைவிடத்  துல்லியமானது.

உணவுத் தேவை ஏற்படும்போது   'ஸ்கவுட்’(வேவு பார்த்தல்) ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள்   இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,  தாங்கள்     கண்டுபிடித்த         தோட்டம் அல்லது    சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. 
     1வட்ட நடனம்
     2வாலாட்டு நடனம். 
வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை  குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப்   பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில்      உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால்,தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம். சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்உட்காரும்போது,  விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின் சோலைகளின் பரவலுக்குக் காரணம்.தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.காரணம், "தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

மகிழ்ச்சிகரமான செய்தி இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். 

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்தினை மழுங்கடித்துவிடும்.  இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். 

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. 

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.
"'பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், 
ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. 
இதை நாம் எப்போது உணர்வோம்?''